பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 302 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலா்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.
குன்னம் வட்டம், அகரம் சிகூா் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த இருவருக்கு வடக்களூா், பரவாய் ஆகிய கிராமத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வசிப்பிடத்துக்கான பட்டா வழங்கினாா்.
கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 302 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சக்திவேல், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கங்காதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.