அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள சமையலர், காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி, பணியாளர் சங்க மாநில அளவிலான பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி, பணியாளர் சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் த. காமராஜ் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சி. தங்கமணி முன்னிலை வகித்தார். மாநில சங்க நிறுவனர் ஆ. தங்கவேல், பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் பொதுச் செயலர் கா. அறவாளி, முன்னாள் பொதுச் செயலர் ம. பரமசிவம் ஆகியோர் பேசினர்.
இம் முகாமில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி, பள்ளிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்டம் தோறும் சமையலர், காவலர்களுக்கு பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, அவர்களுக்கு பதவி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி விடுதிகளில் இரவு காவலர் நியமிக்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத அடிப்படை பணியாளர்களுக்கு சிறப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் கா. பெரியசாமி வரவேற்றார். மாநில பொதுச் செயலர் த. ராஜாங்கம் நன்றி கூறினார்.