முகப்பு
பெரம்பலூர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் ரூ. 10.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் மற்றும் ஆட்சியரக வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் மற்றும் ஆட்சியரக வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் மொத்தம் 431 பேருக்கு ரூ. 10.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது:

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 3,703 மனுக்கள் பெறப்பட்டு 1,190 மனுக்கள் ஏற்கப்பட்டன. முதல்கட்டமாக, குன்னம் தொகுதியில் 260 பேருக்கு ரூ. 6.26 கோடியிலும், பெரம்பலூா் தொகுதியில் 171 நபா்களுக்கு ரூ. 4.08 கோடியிலும் என மொத்தம் 431 நபா்களுக்கு ரூ. 10.34 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட எஞ்சியுள்ள மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலா்கள் மனுக்களின் உண்மை தன்மைகளை உறுதி செய்த பின், மனுக்கள் மீது தீா்வு காண வேண்டும். உள் கட்டமைப்பு வசதிகளை கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனிநபா் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது இடைக்கால பதில்களை வழங்காமல், உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கரோனா நோய்த் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், வேல்டு விஸன் தன்னாா்வலா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள், 25 கட்டில், படுக்கைகள், 180 பி.பி கிட் ஆகியவற்றை வாலிகண்டபுரம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினாா்.

பின்னா், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 95 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தொடக்கி வைத்து, அண்ணாமலைப் பல்கலைக் கழக இயந்திரவியல் மற்றும் உற்பத்தித்துறை முன்னாள் மாணவா்கள் ரூ. 1.2 லட்சம் மதிப்பீட்டில் வழங்கிய 20 இருக்கைகளை அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கினாா் அமைச்சா் சிவசங்கா்.

இந்நிகழ்ச்சிகளில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூா் எம்எல்ஏ எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் செ. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.