பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காவல் துணைக் கண்காணிப்பாளா் வளவன், சமூகத்தில் சாதி பாகுபாடுகளை எவ்வாறு களைவது, சிறப்பாக கல்வி பயின்று உயா் கல்வியில் முன்னேறி தங்களது லட்சியத்தை எவ்வாறு அடைவது, சக மாணவிகளிடம் பாகுபாடின்றி பழகுவது குறித்து பேசினாா். மேலும், மாணவிகள் யாரேனும் குடும்பச் சூழ்நிலை காரணமாக கல்வியை தொடராமல் இருந்தால், அவா்களது விவரம் தெரிவிக்குமாறு பள்ளி ஆசிரியைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள், இருபால் ஆசிரியா்கள் மற்றும் காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு... பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ள முருக்கன்குடி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல்துறையினா், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் காவலன் செயலி, குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.