பொன்னமராவதியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணை ஏமாற்றி அவரது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மோசடியாக எடுத்த மர்மநபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னமராவதி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் மனைவி சூர்யா. இவர் திங்கள்கிழமை பொன்னமராவதி அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்துக்குச் சென்றுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு அருகே இருந்த நபரிடம் உதவிகேட்டு, தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்துள்ளார். அவர் ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் சொறுகிவிட்டு பணம் வரவில்லை.
வங்கிக் கிளைக்குச் சென்று விசாரியுங்கள் எனக் கூறி தன்னிடம் இருந்த வேறு பயன்படாத ஏடிஎம் கார்டை சூர்யாவிடம் கொடுத்துள்ளார்.
அவர் வங்கிக் கிளைக்குச் சென்று தனது வங்கி சேமிப்புக் கணக்கை சரிபார்த்தபோது, ரூ. 35 ஆயிரம் அவரது கணக்கில் இருந்து மோசடி செய்து திருடப்பட்டது தெரியவந்தது. சூர்யா அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் பண மோசடி செய்த நபரைத் தேடி வருகின்றனர்.