தென்னிந்திய தடகளப் போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் 30ஆவது தென்னிந்திய தடகளப் போட்டி செப்.15,16 தேதிகளில் நடைபெற்றது. இதில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக தடகள அணி சார்பில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி மாணவிகள் வி.கரீனா நல்லி 16 வயதிற்குள்பட்டோர் நீளம் தாண்டுதல் பிரிவிலும், மாணவி எஸ்.துர்கா 18 வயதிற்குள்பட்டோர் 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் கலந்து கொண்டனர்.
இதில் மாணவி எஸ்.துர்கா 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2நிமிடம் 28.1 விநாடிகளில் தூரத்தை கடந்து ஐந்தாம் இடத்தை பிடித்தார். வி.கரீனா நல்லி நீளம் தாண்டுதலில் 5.34 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் தமிழக அணி தென்னிந்திய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
வெற்ற பெற்ற மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.அனந்தநாராயணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) கே.கனகராசு, பள்ளித் தாளாளர் ஆர்த்தி ஆர்.சாமிநாதன், ஆலோசகர் பி.பழனியப்பன், முதல்வர் டி.பிரகாசம் ஆகியோர் பாராட்டினர்.