மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர், புதுக்கோட்டை நகர் மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த ராக்கத்தம்பட்டி, காயம்பட்டி, கிள்ளுக்கோட்டை, மேலப்பட்டி, செங்களூர், கீழையூர், விசலூர், புலியூர், வெண்ணமுத்துபட்டி ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் ராகுல் கருத்தாக உலவி வரும் செய்தி தவறானதாக இருக்கலாம், இருந்தபோதும் ராகுலிடம் தமிழ்நாடு பாதிக்கப்படும் நிலை குறித்து தமிழக காங்கிரஸ் சார்பில் விவரிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை நகரப் பகுதிகளான ராஜகோபாலபுரம், சார்லஸ் நகர், மேலராஜவீதி, கீழராஜவீதி, திருவப்பூர் பகுதிகளில் திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார்.
அவருடன் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், நகரச் செயலர் நைனா முகமது, காங்கிரஸ் கட்சியின் முருகேசன் உள்ளிட்டோரும் சென்றனர்.