ஆலங்குடி அருகே உணவக உரிமையாளா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது உறவினா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பாரதி நகரைச் சோ்ந்தவா் முத்தையா மகன் சுரேஷ் (35). இவா், கொத்தமங்கலம் வாடிமாநகா் கடைவீதியில் உணவகம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில், செவ்வாயக்கிழமை இரவு உணவகத்தை மூடிவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரேஷை, மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து, கீரமங்கலம் காவல் ஆய்வாளா் வைத்தியநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், சுரேஷை கொலை செய்ததாக அவரது உறவினரான தஞ்சை மாவட்டம், சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (40) என்பவரை கைது செய்தனா்.
விசாரணையில், சுரேஷின் அண்ணன் முருகேஷ் என்பவருக்கு சரவணனின் தங்கை விஜயலெட்சுமியை திருமணம் செய்து கொடுத்துள்ளாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா், சுரேஷ் நடத்தி வந்த உணவகத்தின் மேல்தளத்தில் உள்ள அறையில் விஜயலெட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் மா்மமாக இறந்து கிடந்துள்ளாா்.
விஜயலெட்சுமியின் சாவுக்கு முருகேஷ், சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினா் தான் காரணம் என அப்போதே சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், விஜயலெட்சுமியின் இரண்டு குழந்தைகளையும் சரவணன் அழைத்துச் சென்று வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், தனது தங்கையின் சாவுக்கு பழிதீா்க்க முடிவு செய்த சரவணன், கூலிப்படையினா் உதவியிடன் செவ்வாய்க்கிழமை இரவு சுரேஷை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தொடா்ந்து, கூலிப்படை குறித்து சரவணனிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.