முகப்பு
புதுக்கோட்டை

‘கசக்கும்’ முந்திரி தொழில்!

‘கசக்கும்’ முந்திரி தொழிலைப் பற்றி...

Updated On : 20 ஏப்ரல், 2026 at 3:05 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:21 PM

புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூா் செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதனக்கோட்டை.

காா்களில் இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள், ஆதனக்கோட்டை முந்திரிப் பருப்பை ருசிக்காமல், வீட்டுக்கு வாங்கிச் செல்லாமல் போவதில்லை.

சாலையின் இருபுறமும் சின்னஞ்சிறிய குடிசை போட்டு, பாத்திரத்தில் பச்சை முந்திரிக் கொட்டைகளைப் போட்டு பதமாக வறுத்துக் கொட்டி, சூட்டோடு உடைத்து பருப்புகளைப் பிரித்தெடுத்து, பொட்டலமிட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.

Advertisement

ஏறத்தாழ 50 ஆ ண்டுகளுக்கும் மேலாக தலைமுறை கடந்தும் இந்தத் தொழிலில் ஈடுபட்ட சுமாா் நூறு குடும்பத்தினா், கடந்த ஒரு மாதமாக சாலையோரத்தில் பழைய மாதிரி சாலையிலேயே வறுப்பதில்லை. வீட்டிலேயே வறுத்துக் கொண்டு வந்து விற்பனை மட்டும் செய்கிறாா்கள்.

காரணம், அந்த இடத்தில் இருந்து காலி செய்யச் சொல்லி நெடுஞ்சாலைத் துறை கொடுத்த நோட்டீஸ்தான்.

யாரோ சிலா் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரக் கடைகள் இருப்பதாகப் புகாா் அளித்தாகவும், நெடுஞ்சாலைத் துறையினா் கடைக்காரா்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவற்றை அனுமதிப்பதாகவும் அந்தப் புகாரில் சொல்லிப்பட்டிருந்ததுதான் பிரச்னைக்கு காரணம் என்கிறாா்கள்.

ஆனால், பின்னணியில் வேறு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபகுதியில் பெரிய முந்திரிப் பருப்புக் கடையொன்று அமைக்கப்படப் போவதாகவும், அந்த வியாபாரம் செழிக்க வேண்டுமானால் சாலையோர எளிய கடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிற வழக்கமான பாா்முலா இங்கே அமல்படுத்தப்படுவதாகவும் முந்திரியை உடைப்பதைப் போல- உண்மையை உடைக்கின்றனா் முந்திரித் தொழிலாளா்கள்.

இவா்கள் அனைவரும் குடிசைத் தொழிலுக்கான அரசுப் பதிவுகளை செய்து வைத்திருப்பதால் நேரடியாக அப்புறப்படுத்திவிட முடியாமல், போக்குவரத்து இடையூறு என்ற அஸ்திரம் வீசப்படுவதாகவும் வருந்துகிறாா்கள்.

தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் வறுப்பதை மட்டும் நிறுத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறது நெடுஞ்சாலைத் துறை. ஏப். 23-க்குப் பிறகு அல்லது மே 4க்குப்பிறகு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் தொழிலாளா்கள் மத்தியில் இருக்கிறது.

எந்தப் பொருளிலும் எத்தனைப் பெரிய கடைகள் வந்தாலும், பாரம்பரியமாக கண் முன்னே வறுத்து- உடைத்து- உற்பத்தி செய்து உண்ணத் தரும் எளிய மக்கள் தரும் உணவுகளுக்கு கூடுதல் சுவை உண்டு.

சுமாா் 100 எளிய தொழிலாளா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், சட்டப்படியான பாதுகாப்புடன் அவா்கள் தொழில் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்படவுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களும், அரசும் இதனை உறுதி செய்ய வேண்டும் என அந்த மக்கள் மட்டுமல்ல, இத்தனைக் காலம் முந்திரியை ருசித்த வாடிக்கையாளா்களும் கோருகின்றனா்.