முகப்பு
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் ஏப். 7-இல் ரயில், சாலை மறியல்: காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 7-இல் ரயில், சாலை மறியல் போராட்டங்களை நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:53 am IST
பகிர்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 7-இல் ரயில், சாலை மறியல் போராட்டங்களை நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்குழுவின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தீபக் மிஸ்ரா ஆயம் காவிரி வழக்கில் வழங்கிய தீர்ப்பு தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் பலவற்றைப் பறித்துவிட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அதிகாரத்தில் உள்ள ஆற்று உரிமையைப் பறித்து மத்திய அரசு அதிகாரப் பட்டியலில் சேர்த்துள்ளது. மரபு வழி ஆற்று நீர் உரிமையைப் பறித்துவிட்டது. 1956 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டத்துக்குப் புறம்பாகவும் இத்தீர்ப்பு உள்ளது.
இவ்வாறான அடிப்படைச் சட்டச் சிக்கல்களை உண்டாக்கியுள்ள தீபக் மிஸ்ரா ஆயத்தின் தீர்ப்பைப் பரிசீலிக்க அரசமைப்புச் சட்ட ஆயம் உச்ச நீதிமன்றத்தில் அமைத்து காவிரி வழக்கை அதன் ஆய்வுக்கு விட வேண்டும்.
காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் ஏப். 7-இல் ரயில் மறியலும், சாலை மறியலும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டச் செயலர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் த.சு. கார்த்திகேயன், வழக்குரைஞர் அ. நல்லதுரை, தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா. வைகறை, காவிரி சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிராசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலர் பாபு, தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலர் அருண்சோரி, வணிகர் சங்கப் பேரவை மாவட்டச் செயலர் வாசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் பிரிவு மாவட்டத் தலைவர் சீ. தங்கராசு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஜெய்னுலாப்தீன், மனித நேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலர் அகமது கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments