ஏழு ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் (ஓவர்சீயர்ஸ்) சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி செயல்படும் ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி, 7 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் டி.வி. திருமாறன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் பி. ஆறுமுகப்பெருமாள், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் வி. காயத்ரி, எம். முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.