ரூ. 7 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் திருட்டு வழக்கை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
ஈரோடு - மேட்டூர் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்குமிடத்தில் கடந்த நவ. 4 ஆம் தேதி சாமி சிலைகளை விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டபோது, தகவலறிந்து அங்கு சென்ற சிலை கடத்தல் பிரிவு போலீஸார், அறையில் இருந்த ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன் (48), சந்திரசேகரன் (50), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (50) ஆகிய 3 பேரிடம் விசாரித்தபோது, திருச்செங்கோடு பகுதியில் உள்ள சிவன் கோயிலிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 3 அங்குலம் உயரம் கொண்ட மரகதலிங்கம், ஒன்றரை அங்குலம் உயரமுள்ள மரகத நந்தியை விற்க முயன்றது தெரியவந்தது. ரூ.7 கோடி மதிப்பிலான மேற்கண்ட மரகத சிலைகளை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், திருச்சி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் உள்ள மணிராஜ், சந்திரசேகரன், கஜேந்திரன் ஆகிய மூவரிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை செய்த நீதிபதி, வரும் 25 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.