அரசு அளித்த விருது பணத்தில் ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவும் அரசு மருத்துவர்
தமிழக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் விருது பணத்தில் மாடு-கோழி வாங்கி அவற்றை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால், முட்டையை
தமிழக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் விருது பணத்தில் மாடு-கோழி வாங்கி அவற்றை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால், முட்டையை ஏழை கர்ப்பிணிகளின் வீட்டுக்கு அரசு மருத்துவர்அனுப்பி உதவி வருகிறார்.
பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் வி. சௌந்தரராஜன். இவர் பொறுப்பேற்ற கடந்த பத்தாண்டுகளில் இவரின் முயற்சியால்
செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடனான தனியார் மருத்துவமனைக்கு நிகராக உருவெடுத்துள்ளது. இவரது சிறப்பான சேவையை பாராட்டி தமிழக அரசு அண்மையில் இவருக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கி, ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கியது. இந்த பரிசு பணத்தில் பசு மற்றும் கோழிகளை வாங்கி, வளாகத்திலேயே வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பசும்பால் மற்றும் கோழி முட்டைகளோடு சுகாதார வளாக தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளையும் சேர்த்து ஐந்து கிராமங்களைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு இவற்றை செவிலியர்கள் மூலம் கொடுக்கும் திட்டத்தை மருத்துவர் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் வி. சௌந்தரராஜன் கூறியது: தமிழக அரசு எனக்கு வழங்கிய விருது பணத்தில் பசுமாடு, நாட்டுக்கோழி வாங்கி இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளேன். பின்தங்கிய வறுமையான சூழலில் உள்ள நிறைய தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டுமென்ற அடிப்படை விவரம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். இத்தகையவர்களை ஐந்து கிராமங்களில் கண்டறிந்து முதல்கட்டமாக 15 பேருக்கு வழங்குகிறோம். நன்கொடையாளர்கள் உதவும்பட்சத்தில் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த எண்ணியுள்ளோம்.
கர்ப்பிணிகள் பதிவு செய்தது முதல் பிரசவிக்கும் காலம் வரை இவ்வாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் பால், காய்கறிகள், முட்டை வழங்கப்படும். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ரத்த சோகை, உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படும். எங்களுடைய சக பணியாளர்கள் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது என்றார். அரசு தனக்கு வழங்கிய நிதியை கர்ப்பிணிகளுக்கு செலவிட முன்வந்துள்ள அரசு மருத்துவரின் தன்னலமற்ற இச்சேவை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.