கேட்கீப்பர் மீது தாக்குதல்: மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி ரயில் மறியல்
தஞ்சாவூர் அரு கே ரயில்வே கேட் மீதான தாக்குதலை தொடர்ந்து, மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி
தஞ்சாவூர் அரு கே ரயில்வே கேட் மீதான தாக்குதலை தொடர்ந்து, மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரை அடுத்த வண்ணாரப்பேட்டையில் ரயில்வே கேட் உள்ளது. சனிக்கிழமை இரவு இந்த ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன்மீனா என்பவருக்கும், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, அந்த நபர்கள் கேட் கீப்பர் அர்ஜூன் மீனாவைத் தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அர்ஜூன்மீனா அளித்த புகாரின்பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், ரயில்வே உயரதிகாரிகளின் உத்தரவின்படி, வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது. இதனால் வண்ணரப்பேட்டைக்கு வர வேண்டிய பேருந்து வரவில்லை. மேலும், வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வாகனங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பலர் சுமார் 8 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதையறிந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தலைமையில் வண்ணாரப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் திரண்டனர். தொடர்ந்து, கேட்டைத் திறக்கும்படி வலியுறுத்தினர். ஆனால், ரயில்வே கேட்டை ஊழியர்கள் திறக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வழியாக வந்த ஜனசதாப்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீஸாரும், வல்லம் போலீஸாரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதன் பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ஆனாலும், ரயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனிடையே, வண்ணாரப்பேட்டைக்கு வந்த பேருந்து ரயில்வே கேட்டுக்கு சிறிது தொலைவிலேயே பயணிகளை இறக்கிவிட்டு விட்டு திரும்பிச் சென்றது.