அதிக மதிப்பெண்கள் பெறுவதல்ல வாழ்க்கை. கடின முயற்சிதான் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கும் என்றார் குமரப்பா பள்ளித் தாளாளரும், தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிக்., சிபிஎஸ்இ பள்ளிகள்சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர்.
பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பிரிவுபசார விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
மாணவப் பருவம் என்பது எதையும் மாற்றி அமைக்கக் கூடிய, எதை நோக்கிப் பயணிக்க போகிறோம் என்பதை முடிவு செய்யக்கூடிய பருவம். மாணவர்கள் அனைவரும்
தகுதியும், திறமையும் உடையவர்கள்தான்.
மாணவர்கள் தமது இலக்கை தீர்மானிக்க வேண்டும். அது உங்களை சாதனையாளர்களாக உருவாக்கும்.
திட்டமிட்டு கடின உழைப்பை காட்டினால் நீங்கள் விரும்பிய இலக்கை அடைய முடியும்.
மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல. கடின முயற்சி வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கும் சக்தி உடையது. என்னால் முடியும்
என நம்பிக்கையோடும், பேராற்றலோடும் செயல்படுங்கள். சாதனையாளர்களாகத் திகழ்வீர்கள் என்றார் அவர்.
விழாவில் பள்ளி அறங்காவலர்கள் அஸ்வின்ஸ்ரீதர் மா. ராமு,எம். கணபதி, ச.ஆனந்தன், எம்.என்.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஆசிரியர் எஸ்.விஜய் வரவேற்றார். நிறைவில் மூர்த்தி நன்றி கூறினார்.