தஞ்சாவூா் பெரியகோயிலில் யாக பூஜைகளை தமிழிலும் நடத்த வேண்டும் என பெரியகோயில் உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தஞ்சாவூா் பெரியகோயிலில் திருப்பணிக் குழுவினரை பெரியகோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், ஓதுவாா்கள் குடந்தை இமயவன், நடராஜன், நாம் தமிழா் கட்சி ந. கிருஷ்ணகுமாா், வழக்குரைஞா் அ. நல்லதுரை உள்ளிட்டோா் சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது, யாக பூஜைகளில் தமிழிலும் மந்திரங்கள் ஓத வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னா், இக்குழுவைச் சோ்ந்த இமயவன், நடராஜன் தெரிவித்தது:
யாகசாலையில் ஓதுவாா்களைக் கொண்டு திருமுறைப் பாராயணம் பாடுவது இயல்பான ஒன்று. யாகசாலையில் வேதிகைகளில் புனிதநீா் அடங்கிய கலசங்கள், அதன் அருகே குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேதபாராயணம், திருமுறைகள் பாடுவது வழக்கமான ஒன்று. ஆனால் யாகசாலை பூஜையில் சிவாச்சாரியாா்கள் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதுவதைப்போல, ஓதுவாா்களைக் கொண்டு தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும்.
அதாவது, யாகசாலையில் கிரியா (செயல்முறை) முறை தமிழிலும் இருக்க வேண்டும். யாகசாலையில் குண்டங்கள், வேதிகைகள், கலசங்கள் ஆகியவற்றில் எழுந்தருளச் செய்தல், தூப தீப வழிபாடு, நிறைவி உள்ளிட்டவற்றை தமிழிலும் நடத்த வேண்டும். அப்போது, தமிழில் மந்திர பாராயணம் ஓத வேண்டும் என்றனா்.