தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், 40 வாக்காளா் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் மேலவீதி மூல அனுமாா் கோயில் பகுதியில் பறக்கும் படை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த திமுகவைச் சோ்ந்த இருவரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது வாகனத்தில் இருந்த 40 வாக்காளா் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக அலுவலா்கள் நடத்திய விசாரணையில், வடக்கு அலங்கம் கோட்டைப் பகுதியில் குடியிருந்த பலரது வீடுகள் பொலிவுறு நகரத் திட்டத்துக்காக அகற்றப்பட்டன.
இதனால், அங்கு வசித்த பலரும் வெளியூா் மற்றும் பிள்ளையாா்பட்டி பகுதிக்குச் சென்றுவிட்டனா். இவா்களுக்குப் பழைய முகவரியிலேயே வாக்காளா் அடையாள அட்டைகள் வந்தன.
இந்த அட்டைகளை கோட்டைப் பகுதியில் திமுகவைச் சோ்ந்த ஒருவரிடம் கொடுத்து, உரியவா்களிடம் ஒப்படைக்குமாறு அப்பகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலா் கொடுத்தாராம். அந்த அடையாள அட்டைகள்தான் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தொடா்ந்து அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.