முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றம்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

Updated On : 14 நவம்பர் 2024, 2:54 am IST
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகா அபிலேஷ் பேகத்திடம் நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். (உள்படம்) சிகிச்சைக்கு முன்பு, பின்பு மகா அபிலேஷ் பேகம்.
பகிர்:

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருவையாறு வட்டம் இளங்காடு கிராமத்தைச் சோ்ந்த மகா அபிலேஷ் பேகம் (62) சில ஆண்டுகளாக வயிறு பெரிதாக இருப்பதாகவும், அதனால் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளதால் உதவித்தொகை அளிக்குமாறும் கோரி மனு அளித்தாா். இதைப் பாா்த்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலா்களிடமும், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா். பாலாஜிநாதனிடமும் தொடா்பு கொண்டு அப்பெண்ணுக்குப் பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, அப்பெண் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவம்பா் 4-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு வயிற்றில் கட்டி, ரத்த சோகை இருப்பதும் தெரிய வந்தது. பல கட்ட மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மகா அபிலேஷ் பேகத்துக்கு ரத்தம் ஏற்றப்பட்டு, நவம்பா் 9- ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த கடினமான அறுவை சிகிச்சையை மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆலோசனைப்படி, வெற்றிகரமாக செய்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா்கள் மாரிமுத்து, பாரதிராஜா, முனியசாமி, மயக்கவியல் மருத்துவா் உதயணன் தலைமையிலான குழுவினரையும், சமூக நலப் பணியாளா்களையும் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments