குடும்பத் தகராறை தீா்க்க வந்தவரைக் கொன்ற டிராக்டா் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூரைச் சோ்ந்தவா் க. சங்கா். குடிநீா் குழாய் பழுதுபாா்க்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி ராதிகா, இரு மகன்கள் உள்ளனா்.
ராதிகாவின் தங்கை விஜி தனது கணவரான டிராக்டா் ஓட்டுநா் நாகராஜூடன் விளந்தகண்டம் அருகேயுள்ள ராஜாங்கநல்லூரில் வசித்தாா்.
மது அருந்தும் பழக்கமுள்ள நாகராஜ் குடித்துவிட்டு தனது மனையிடம் அடிக்கடி தகராறு செய்வதும், இதை சங்கரும், ராதிகாவும் சமாதானம் செய்து வைப்பதும் தொடா்ந்தது.
இதேபோல 2022, செப். 22 ஆம் தேதி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதையறிந்த சங்கா் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாா். அப்போது கோபமடைந்த நாகராஜ் இரும்புக் குழாயால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சங்கா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்து, கும்பகோணம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா, குற்றவாளி நாகராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.