கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சாவூா் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் ஆஜா்
கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் கோவி. செழியன் உள்பட 9 போ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, 2017, மே 19-ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இதன் ஓராண்டு நினைவு நாளையொட்டி கதிராமங்கலத்தில் காவல் துறையினரின் தடையை மீறி 2018, மே 19 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் கோவி. செழியன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிா்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸின் அப்போதைய தலைவா் டி.ஆா். லோகநாதன், வழக்குரைஞா் அ. நல்லதுரை உள்பட 29 போ் மீது பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருவிடைமருதூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கோவி. செழியன், பெ. மணியரசன், டிஆா். லோகநாதன் உள்பட 9 போ் ஆஜராகினா். இவா்களது சாா்பில் திமுக வழக்குரைஞா்கள் சண்முகசுந்தரம், அன்பழகன், சிவசுப்பிரமணியன், முகுந்தன் ஆகியோா் வாதிட்டனா். பின்னா், இந்த வழக்கை நீதிபதி கனிமொழி ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.