திருச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வியாழக்கிழமை அதிகாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி குழுமணி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பின்புறம் வயல் வெளியில் வியாழக்கிழமை அதிகாலை ரத்தக் காயங்களுடன் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாலா என்கிற மாலதி (40) என்பது தெரியவந்தது. மாலதிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் அவருக்கு திருமணம் நடைபெறவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டதால் மாலா கண்ணில் படுபவரையெல்லாம் திட்டுவாராம். இதேபோல், புதன்கிழமை இரவும் திட்டியதால், அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்திய நபர்கள் தங்களை திட்டுவதாக நினைத்து ஆத்திரமடைந்து கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.