திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். திருச்சி ஆயுதப்படையில் முதல்நிலை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கெளரி (34). இவர்களுக்கு ஒரு மகள், மகன் ஆகியோர் உள்ளனர்.
கடந்த 13-ஆம் தேதி கெளரி தனது வீட்டிலிருந்து தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே நின்றுகொண்டு டிக்கெட் எடுப்பதற்காக பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறிய கெளரி பேருந்திலிருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெளரி திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான கரூர் மாவட்டம் நெய்தலூர் கட்டாணிமேடு பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்தை (34) கைது செய்தனர்.