திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள நகைக் கடை ஒன்றில் திங்கள்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்தில் கடையில் இருந்த நகைகள் எரிந்து நாசமானது. கடையின் உரிமையாளர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி கடைவீதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருபவர் அயன்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த மருதை மகன் பன்னீர்செல்வம்(54). வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு கடையில் நகை செய்யும் வேலையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அருகே இருந்த மின்சேமிப்பு கலன் வெடித்து தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென கடை முழுவதும் தீப்பற்றியது. இதில் பன்னீர்செல்வம் உடலில் தீக்காயங்களுடன் கடையின் வெளியே ஓடி வந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடையில் இருந்த நகைகள் முழுவதும் எரிந்து நாசமானது. விபத்து வையம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.