"இனி ஆண்டுதோறும் ஓபன் டென்னிஸ் போட்டி'
திருச்சியில் இனி ஆண்டுதோறும் ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.
திருச்சியில் இனி ஆண்டுதோறும் ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகரக் காவல் துறை சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 17 ஆம் தேதி தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பரிசுகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
திருச்சியில் முதல் முறையாக நடத்தப்பட்ட ஓபன் டென்னிஸ் போட்டி இனி ஆண்டுதோறும் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் போட்டிகள் நடைபெறும். காவல்துறை மைதானத்தில் ரூ. 20 லட்சத்தில் பேட்மிண்டன் போட்டிக்கான மைதானம் அமைக்கும் பணி ஓரிரு மாதங்களிலும், அண்ணா விளையாட்டரங்கில் ரூ.30 லட்சத்தில் கபடி போட்டிக்கான விளையாட்டரங்கம் அமைக்கும் பணி ஓரிரு வாரங்களிலும் தொடங்கும். மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் ஆட்சியர்.
திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ் பேசும்போது டிசம்பர் மாதத்தில் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகரையில் பொதுப்பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படும் என்றார் அவர். 12,14 மற்றும் 16 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: (முதல் 4 இடங்களைப் பெற்றோர்)
12 வயதுக்குள்பட்டோர் ஆண்கள் - சென்னை ஆறுமுகம் ஆர்சிட், ஜியோ மாத்தம், சண்முகப்பிரியன், சிவபிரசாத், பெண்கள் பிரிவு- தஞ்சாவூர் தனஸ்ரீ, சென்னை கீர்த்தி, ஐஸ்வர்யா, பாரதி.
14 வயதுக்குள்பட்டோர் ஆண்கள்- கரூர் நிதிஷ்பாலாஜி, சென்னை சாமுவேல் ஜோஸ், யஸ்வந்த், சுகந்த், பெண்கள்- கரூர் கார்த்திகா விஜய், சென்னை பண்டாரூ குந்தனஸ்ரீ, லட்சுமிபிரபா, மிருதுளா மகாலட்சுமி.
16 வயதுக்குள்பட்டோர் ஆண்கள்- திருச்சி ராஜேஷ் கண்ணன், சென்னை அனிருத்குமார், சித்தார்த், சுபாஷ், பெண்கள் - கரூர் சுருதி, சென்னை தீபலட்சுமி, பண்டாரூ குந்தனஸ்ரீ, கார்த்திகா விஜய்.
மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி, சார் ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர், தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், ரவி முருகையா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.சி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. புண்ணியமூர்த்தி வரவேற்றார். போக்குவரத்து உதவி ஆணையர் விக்னேசுவரன் நன்றி கூறினார்.