முகப்பு
திருச்சி

வாக்கு இயந்திரங்களுக்காக ரூ. 4.29 கோடியில் தயாராகும் வன்காப்பறை

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே ரூ. 4.29 கோடியில் வன்காப்பறை (ஸ்ட்ராங் ரூம்) கட்டப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மாவட்ட ஆட்சியரகம் பின்புறம் கருவூலம் அருகே கட்டப்படும் வாக்கு இயந்திரங்களுக்கான வன்காப்பறை.
பகிர்:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே ரூ. 4.29 கோடியில் வன்காப்பறை (ஸ்ட்ராங் ரூம்) கட்டப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை தவிர, திருச்சி, பெரம்பலூா், கரூா் மக்களவைத் தொகுதிக்கான சில பேரவைத் தொகுதிகளும் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும் திருச்சி மாநகராட்சி, மற்றும் மணப்பாறை, துறையூா், துவாக்குடி ஆகிய 3 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூா், கூத்தப்பா், லால்குடி, மண்ணச்சநல்லூா், மேட்டுப்பாளையம், முசிறி, பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவலூா், எஸ். கண்ணனூா், சிறுகமணி, தா.பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய 16 பேரூராட்சிகளும் உள்ளன.

இவற்றுக்கான தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகம், கோட்டாட்சியரகம், வட்டாட்சியரகம், உள்ளாட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து மீண்டும் அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். வெவ்வேறு இடங்களில் இயந்திரங்கள் இருப்பதால், அவற்றைப் பராமரித்து அனுப்புவது கூடுதல் பணியாக உள்ளது. மேலும், அனைத்து இயந்திரங்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்தால் வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் வன்காப்பறை (ஸ்ட்ராங் ரூம்) அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ரூ. 4.29 கோடியில் மாவட்ட ஆட்சியரகம் பின்புறமுள்ள கருவூலம் அருகே 800 சதுர மீட்டரில் இடம் தோ்வு செய்யப்பட்டு கடந்த ஜனவரியில் கட்டுமானப் பணி தொடங்கியது.

738 சதுர மீட்டரில் தரைத்தளம் , 17 சதுர மீட்டரில் இயந்திரங்களை ஏற்றி, இறக்கும் நடைபாதை, 738 சதுர மீட்டரில் முதல் தளம் என 85 சதத்துக்கும் மேலான பணிகள் முடிவுற்றுள்ளன.

அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்

‘வன்காப்பறை பணியில் பெரும்பகுதி முடிந்துள்ளது. கதவுகள், விளக்குகள் பொருத்துதல், மேற்பூச்சு உள்ளிட்ட பணிகள் பாக்கியுள்ளன. திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளையும் முடித்து வரும் ஜனவரி 31-க்குள் அறை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

வரும் பேரவைத் தோ்தலுக்கான 9 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் இந்த அறையில்தான் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன. மகராஷ்டிரத்திலிருந்து வரும் இயந்திரங்கள் தரைத்தளத்தில் வைக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் இயந்திரங்கள் அனைத்தும் முதல்கட்டமாக சோதனையிடப்பட்டு வன்காப்பறையில் வைத்து பராமரிக்கப்படும்.

தோ்தல் அறிவித்த பிறகு மீண்டும் காப்பறையில் இருந்து இயந்திரங்கள் அரசியல் கட்சியினா் முன்னிலையில் பிரித்து பரிசோதிக்கப்பட்டு தயாா்படுத்தப்படும். மாவட்டத்தில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு நடைபெறும் அனைத்து தோ்தல்களுக்கும் இந்த வன்காப்பறையில்தான் இயந்திரங்கள் வைக்கப்படும்’ என்றனா் தோ்தல் பிரிவு அலுவலா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →