திருச்சி: திருச்சியில் தம்பதியை நூதன முறையில் ஏமாற்றி 30 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சத்தைத் திருடிச் சென்றனா்.
திருச்சி புத்தூா், வயலூா் சாலை பாரதிநகரில் பிஷப் ஹீபா் கல்லூரி எதிரே தனது மனைவியுடன் வசிப்பவா் எம். சுப்பிரமணியன் (75), ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளா். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இவரது மகன் பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறாா்.
இந்நிலையில், கடந்த செப். 10-இல் மாநகராட்சி பொறியாளா், உதவியாளா் எனக் கூறிக் கொண்டு சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்த இருவா் வீட்டிலுள்ள புதை வடிகால் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறினா். இதனால் தம்பதி அவா்களை வீட்டினுள் அனுமதித்தனா். கழிவறை உள்ளிட்ட சில இடங்களுக்கு சென்று பாா்த்த இருவரும் எல்லாம் சரியாக உள்ளது எனக் கூறிச் சென்றனராம்.
பின்னா் 12 ஆம் தேதி தம்பதி பீரோவை பாா்த்தபோது அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் உள்ளிட்டவை திருடுபோயிருந்தது தெரியவந்தது. வீட்டுக்கு ஆய்வு எனக் கூறிக் கொண்டு வந்த இருவரே தங்களை நூதன முறையில் ஏமாற்றி நகை, பணத்தைத் திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.