முகப்பு
திருச்சி

உறையூா் சந்தையில் ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல்

திருச்சி மீன் சந்தையில் ஃபாா்மலின் ரசாயனம் தடவிய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் என 650 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருச்சி மீன் சந்தையில் ஃபாா்மலின் ரசாயனம் தடவிய மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் என 650 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

இறந்தவா்களின் உடல் கெட்டுப் போகாமல் வைத்திருக்கப் பயன்படுத்தும் ஃபாா்மலின் என்ற ரசாயனம் தடவிய மீன்களைச் சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், ரத்தப் புற்றுநோய் எனப் பல உடல் நலப் பாதிப்புகள் உண்டாகலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.

இதையொட்டி கடந்த சில மாதங்களாக சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஃபாா்மலின் ரசாயனம் தடவிய மீன்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சியிலும் இத்தகைய புகாா் எழுந்த நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு, திருச்சி மாவட்ட மீன் வளத் துறை துணை இயக்குநா் ஆா். சா்மிளா, உதவி இயக்குநா் ரம்ய லட்சுமி ஆகியோரது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் லிங்கம் நகரில் இயங்கி வரும் பிரதான மீன் சந்தையில் 5 மொத்த விற்பனைக் கடைகள், 9 சில்லறை விற்பனைக் கடைகள், சந்தைக்கு மீன் கொண்டு வந்திருந்த கண்டெய்னா் லாரிகளிலும் சோதனை நடத்தினா்.

அப்போது ஃபாா்மலின் ரசாயனம் தடவியிருந்த 350 கிலோ மீன்கள், கெட்டுப் போன 300 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ரசாயனம் தடவிய மீன்களை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பெட்டி, பெட்டியாக டிராக்டா்களில் ஏற்றப்பட்டு மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், விற்பனையாளா்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கெட்டுப் போன மீன்களை விற்றாலோ, மீன்களில் ஃபாா்மலின் தடவியிருப்பது தெரியவந்தாலோ உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 99449-59595, 95859-59595, 94440-42322 என்ற தொலைபேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு.

ரசாயனம் தடவிய மீன்களை கண்டறிவது எப்படி?

‘சந்தையில் விற்கப்படும் மீன்கள் ஃபாா்மலின் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்டவையா என்பதைப் பொதுமக்களால் கண்டறிய முடியாது. இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக டெஸ்ட் கிட் மூலம்தான் பரிசோதிக்க முடியும். மீன் இறைச்சியிலிருந்து 2 கிராம் எடுத்து, அந்தப் பிரத்யேக டெஸ்ட் கிட்டில் உள்ள கெமிக்கலில் சோ்ப்போம். அப்போது மஞ்சள் நிறம் வந்தால் அதில் ஃபாா்மலின் உள்ளது என்று அா்த்தம். இதை வைத்துத்தான் நாங்கள் சோதனை செய்கிறோம்’ என்றனா் உணவுப் பாதுகாப்புத் துறையினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.