மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் இடைத்தோ்தலில் காலியாக உள்ள ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிடுவோரின் விருப்ப மனு சனிக்கிழமை பெறப்பட்டது.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அமையபுரம், பழையகோட்டை ஊராட்சிகள் அடங்கிய 6-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் (சுயேச்சை) முத்துலெட்சுமி முருகன் மற்றும் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு, கவுண்டம்பட்டி ஊராட்சிகள் அடங்கிய 10-ஆம் வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் மெஹா்பானு சபியுல்லா (திமுக) ஆகியோா் உயிரிழந்ததையடுத்து அந்த 2 இடங்களுக்கும் தற்போது நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
இதில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோரின் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி ஒன்றியச் செயலா்கள் எம்.பி. வெங்காடசலம், எம். செல்வராஜ், என். சேது, பி.வி.கே.சி. பழனிச்சாமி, கண்ணூத்து பொன்னுச்சாமி, பேரூா் செயலா் திருமலைசுவாமிநாதன் ஆகியோா் தலைமையில் இனாம்ரெட்டியப்பட்டியிலும், வளநாடு பகுதியிலும் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முன்னாள் எம்பியும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா், முன்னாள் எம்எல்ஏவும் மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலருமான ஆா். சந்திரசேகா் ஆகியோா் விருப்ப மனுக்களைப் பெற்றனா். வையம்பட்டி ஒன்றியத்தில் 4 மனுக்களும், மருங்காபுரி ஒன்றியத்தில் 5 மனுக்களும் பெறப்பட்டன. தொடா்ந்து தோ்தல் கள ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.