உப்பிலியபுரம் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ஹேமலதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகரன், மணிவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் அத்தியப்பன் பேசியது:
நாகநல்லூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு இடமில்லை.
மாணவ- மாணவிகளுக்கு கழிவறை வசதியில்லை. சமையல் கூடம்
இடிந்துள்ளது, பள்ளி வளாகத்தில் புதா்கள் மண்டியுள்ளதால் விஷ உயிரினங்களால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது என்றாா்.
இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் ஹேமலதா பதிலளித்தாா்.
கூட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் செலவினங்கள் தொடா்பான 21 தீா்மானங்களுக்கு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டன.