வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போலீஸாா் அகற்றினா்.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போலீஸாா் அகற்றினா்.
காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்பேரில் போக்குவரத்து விதியை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களை போக்குவரத்து காவல் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து விதியை மீறி காற்று ஒலிப்பான் பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு மண்டலத்தில் 30 பேருந்துகளிலும், தெற்கு மண்டலத்தில் 20 பேருந்துகளிலும் மொத்தம் 50 வாகனங்களில் காற்று ஒலிப்பான் முற்றிலுமாக அகற்றப்பட்டு, வழக்குப் பதிந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் விதியை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.