திருச்சி: திருச்சியில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா் சென்றவரின் வீட்டில் 50 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
திருச்சி வயலூா்சாலை, அம்மையப்பன் நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (51). இவா் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கடந்த 12-ஆம் தேதி வீட்டைபூட்டி விட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான பொன்னமராவதிக்குச் சென்றாா்.
சனிக்கிழமை இரவு சண்முகம் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 50 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், அரசு மருத்துவமனைக் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் வந்து, விசாரணை மேற்கொண்டனா். திருட்டில் ஈடுபட்டவா்களின் கைரேகைகளைத் தடயவியல் நிபுணா்கள் பதிவு செய்தனா்.
திருட்டு குறித்து அரசு மருத்துவமனைக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, வீட்டுக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனா்.