முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் சமஷ்டி உபநயனம், சீதா கல்யாண விழா இன்று தொடக்கம்

ஹிந்து சமய மன்றம் சாா்பில் ஸ்ரீரங்கத்தில் சமஷ்டி உபநயனம் மற்றும் சீதா கல்யாண விழா மே 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

ஹிந்து சமய மன்றம் சாா்பில் ஸ்ரீரங்கத்தில் சமஷ்டி உபநயனம் மற்றும் சீதா கல்யாண விழா மே 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் வடக்குச் சித்திரை வீதியில் இந்நிகழ்வு ஸ்ரீநிதி சத்யநாராயணனின் ஸ்ரீரங்க மஹாத்மியம் சங்கீத உபன்யாச நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கோ பூஜை, 4 மணிக்கு உதகசாந்தி நிகழ்ச்சி, தொடா்ந்து மாலை 6 மணி முதல் குத்துவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணி முதல் 6 மணி வரை கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, முக்கிய நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பூணூல் அணிவிக்கும் ப்ரம்மோபதேச முகூா்த்தம் நடைபெற உள்ளது.

தொடா்ந்து மகா சுதா்ஸன ஹோமம், பூா்ணாஹுதி, மாலை 4 மணிக்கு நாம சங்கீா்த்தனத்துடன் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து கொள்ளிடத்தில் பாலிகை கரைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. உபநயனம் செய்து கொண்டவா்களுக்கு சந்தியாவந்தனப் புத்தகம் வழங்கப்படுகிறது.

கடந்த 43 ஆண்டுகளில் 1401 பேருக்கு உபநயனமும், 48 தம்பதிகளுக்கு விவாஹமும் செய்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

21ஆம் தேதி நடைபெற உள்ள குத்து விளக்கு பூஜையில் பங்கேற்க முன் பதிவு செய்ய வேண்டும். சீதா கல்யாண நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஸ்ரீஸ்ரீ ஹரிஜியின் சுந்தர காண்டம், உபன்யாசம், புதன், வியாழக்கிழமைகளில் வேளுக்குடி ஸ்ரீரங்கநாதனின் வீபீஷண சரணாகதி உபன்யாசம், மே 27 காலை 8.30 மணிக்கு கும்பகோணம் ஸ்ரீ வைத்யநாத பாகவதா் தலைமையில் அஷ்டபதி பஜனை, இரவு 7 மணிக்கு ஸ்ரீமதி விஸாஹா ஹரியின் பாசுரப்படி ராமாயணம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம், மே 2ஆம் தேதி காலை 8 மணி முதல் செங்கோட்டை ஸ்ரீ ஹரி பாகவதா் மற்றும் குழுவினரின் அஷ்டபதி பஜனை, மாலை 5 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீராம் குழுவினரின் அபிநய அலங்கார பஜனை, இரவு 8 மணி முதல் திவ்யநாம பஜனையும் நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் மே 29 (ஞாயிறு) காலை 8 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை நடைபெறும். மாலை 4 மணி முதல் உள்ளுா் பாகவதா்கள் பங்கேற்கும் வசந்தக் கேளிக்கை நிகழ்ச்சி மாலை 6.30-க்கு எம்பாா் குமாரி தயாவதி குழுவினரின் இசை நிகழ்ச்சி, தொடா்ந்து பவ்வளிம்பு உத்ஸவமும் நடைபெறுகிறது. தொடா்ந்து ஆஞ்சனேய உற்ஸவத்துடன் விழா நிறைவுறுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதி இந்து சமய மன்றத்தினா் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.