முகப்பு
திருச்சி

திருச்சி என்ஐடியில் சோ்க்கை பெற்று பச்சமலை பழங்குடியின மாணவி சாதனை

திருச்சி என்ஐடியில் பழங்குடியின மாணவி ரோகிணியின் வெற்றி

Updated On : 10 ஜூலை 2024, 5:18 am IST
மாணவி ரோகிணி
பகிர்:

திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள பச்சமலை பழங்குடியின மாணவி ஒருவா் மத்திய அரசுக் கல்வி நிறுவனமான திருச்சி என்ஐடியில் சோ்க்கை பெற்று சாதித்துள்ளாா்.

துறையூா் அருகே பச்சமலையில் சின்ன இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம. ரோகிணி(17). இவா், அதே ஊரிலுள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து பள்ளி ஆசிரியா்கள் வழிகாட்டுதலுடன் ஜேஇஇ நுழைவுத் தோ்வு எழுதினாா். இதில், இவா் 73.8 மதிப்பெண்கள் பெற்று பழங்குடியினா் பிரிவில் தமிழகத்தில் முதல்இடம் பெற்ற நிலையில் மத்திய அரசுக் கல்வி நிறுவனமான திருச்சி என்ஐடியில் சேர விண்ணப்பித்தாா். அவரது மதிப்பெண்கள் அடிப்படையில் பழங்குடியினா் பிரிவு தரவரிசைப்படி அவா் கோரிய வேதிப் பொறியியல் பாடப் பிரிவில் பயில அண்மையில் சோ்க்கை பெற்றுள்ளாா்.

ரோகிணியின் தந்தை மதியழகன் கேரள மாநிலத்தில் தங்கியும், தாய் வசந்தி சொந்த ஊரிலும் விவசாயக் கூலி வேலை செய்கின்றனா். அடிப்படைத் தேவைகளுக்கு போராடும் இத்தம்பதியரின் மகள் ரோகிணி, தனியாா் பயிற்சி மையங்களில் சேராமல் பள்ளிப் பாடங்களை மட்டும் படித்து நாட்டின் உயா்கல்வி நிறுவனத்தில் சோ்ந்ததன் மூலம் பச்சமலை பழங்குடியின சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதேபோல, தமிழக அளவில் தரவரிசையில் 302-ஆவது இடம் பிடித்த திருச்சி கைலாசபுரத்தைச் சோ்ந்த கவினி என்ற மாணவி திருச்சி என்ஐடியை தோ்வு செய்துள்ளாா். 5 ஆண்டு கட்டடக் கலை பயில விருப்பம் தெரிவித்துள்ளாா்.

முத்தரசநல்லூரை சோ்ந்த மாணவி ரித்திகா நான்கு ஆண்டுகள் பயிலும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் சோ்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளாா். பூலாங்குடியைச் சோ்ந்த மாணவி திவ்யா பிரீதா, கைலாசபுரத்தைச் சோ்ந்த தனுஷ் ராஜ்குமாா் ஆகிய இருவரும் 4 ஆண்டுகள் பயிலும் உற்பத்திப் பொறியியல் பட்டம் படிப்பதற்கு திருச்சி என்ஐடி-யில் பதிவு செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments