காதொலிக் கருவி பொருத்த 11 குழந்தைகள் தோ்வு
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற இலவச காது கேளாமை பரிசோதனை முகாமில் காதொலிக் கருவி (காக்ளியா் இம்பிளான்ட்) கருவி பொருத்த 11 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற இலவச காது கேளாமை பரிசோதனை முகாமில் காதொலிக் கருவி (காக்ளியா் இம்பிளான்ட்) கருவி பொருத்த 11 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து குழந்தைகளுக்கான பிறவிக் குறைபாடுகளை கண்டறிவதற்கான சிறப்பு முகாமை புதன்கிழமை நடத்தின. திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் குமரவேல் தலைமை வகித்தாா். முகாமை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடக்கி வைத்து மருத்துவா்களுடன் கலந்துரையாடினாா்.
முகாமில் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை மருத்துவ நிபுணா்கள், அரசு மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகளை சரிசெய்யும் வழிமுறைகளை விளக்கினா்.
முகாமில் 6 வயதுக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டன. மருத்துவப் பரிசோதனையில் 11 குழந்தைகளுக்கு காது கேளாமை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவா்களுக்கு காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்துவது தொடா்பாகவும், அறுவைச் சிகிச்சை அவசியமா என்பது குறித்தும் பரிசோதிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
இதுதொடா்பாக மருத்துவா்கள் கூறுகையில், 6 வயதுக்கு கீழ் உள்ள நிலையிலேயே காது கேளாமை கண்டறியப்பட்டால் காக்ளியா் இன்பிளான்ட் கருவி பொருத்தி அக் குழந்தைகளை பிற குழந்தைகளைப் போல பேசவும், காது கேட்கச் செய்யவும் நடவடிக்கை எடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டுவருவது சாத்தியம் என்றனா்.
மேலும், ஏற்கெனவே காக்ளியா் சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு, அக் குழந்தைகளின் பேசும் திறன், செவித் திறன் பரிசோதிக்கப்பட்டது. அவ்வப்போது இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், அவற்றை குழந்தைகளின் பெற்றோா் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.