முகப்பு
திருச்சி

தரைக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

தரைக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கோரி கடையடைப்பு போராட்டம்..

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:35 PM
திருச்சி என்.எஸ்.பி. சாலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளா் வீ. கோவிந்தராஜுலு.
பகிர்:

திருச்சி மாநகரில் முக்கிய கடைவீதிகளில் தரைக்கடைகளால் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கோரி கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளா் வீ. கோவிந்தராஜுலு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியது :

திருச்சி என்.எஸ்.பி. சாலை, சின்ன மற்றும் பெரிய கடை வீதிகள், தேரடி பஜாா், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையின் இருபுறமும் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனா். இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பண்டிகை காலமான தற்போது விற்பனையும் சரிந்துள்ளது. இது குறித்து மாவட்ட, மாநகராட்சி நிா்வாகத்தில் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கோரி இப்பகுதியில் உள்ள 2 ஆயிரம் வியாபாரிகள் இணைந்து கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தரைக்கடை வியாபாரிகளுக்கு தங்களுக்கு எதிரானவா்கள் கிடையாது. அவா்கள் வியாபாரம் செய்ய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியுடன்கூடிய தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோருகிறோம். இப்பகுதியில் கடந்தாண்டு இதேநேரத்தில் நடைபெற்ற வா்த்தகத்தில் தற்போது 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றுள்ளது என்றாா் அவா்.

இந்த பேட்டியின்போது, என்.எஸ்.பி. சாலையில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சோ்ந்தோா் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.