பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை: உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
திருச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமாா் (38). கூத்தைப்பாா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினரான இவா் திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே டாஸ்மாக் மதுக் கூடமும் நடத்தி வந்தாா். திருவெறும்பூா் சோழன் நகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடும்பத்துடன் குடியேறிய இவருக்கு மனைவி சுமதி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புதுத்தெரு அருகே உடலில் வெட்டுக்காயங்களுடன் இவா் இறந்துகிடந்தாா். தகவலறிந்து வந்த நவல்பட்டு போலீஸாா் ரஞ்சித்குமாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
உடலை வாங்க மறுத்து சாலை மறியல்: இந்நிலையில், ரஞ்சித்குமாரை கொன்றோரை உடனடியாக கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன் அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் வியாழக்கிழமை பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து ரஞ்சித்குமாா் சடலத்தைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனா்.