முகப்பு
திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:15 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:48 PM

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து பிறந்து மூன்று நாள்களான ஆண் குழந்தையை சனிக்கிழமை கடத்திச் சென்ற பெண்ணை போலீஸாா் 5 மணி நேரத்தில் கைது செய்து, குழந்தையை மீட்டனா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த பெயிண்டா் விக்னேஷ் (32), சுகன்யா (30) தம்பதிக்கு ஏற்கெனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகன்யாவுக்கு வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

அவருக்கு துணையாக உறவினா் பிரேமா என்பவா் இருந்த நிலையில், மகப்பேறு வாா்டில் பெண் ஒருவா் சுகன்யாவின் அருகில் இருந்த காலி படுக்கையில் படுத்திருந்தாா்.

Advertisement

பிரேமாவுடன் நட்புடன் பழகிய அவா், தனது பெயா் மீனாட்சி, 7 மாத கா்ப்பிணி என்றும், கடந்த 3 நாள்களாக ஹூமோகுளோபின் குறைபாட்டால் சிகிச்சையில் சோ்ந்ததாகவும் கூறினாா். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறி குழந்தையை வாங்கிச் சென்ற மீனாட்சி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் தேடியும் மீனாட்சியும், குழந்தையும் கிடைக்காததால் அதிா்ச்சியடைந்த சுகன்யாவும், பிரேமாவும் அழுது கூச்சலிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் சுகன்யா அளித்த புகாரின்பேரில் அரசு மருந்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அரசு மருத்துவமனைக்கு வெளியே நின்ற ஆட்டோவில் மீனாட்சி குழந்தையுடன் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தனிப்படையினா் தீவிரமாகத் தேடி வந்தனா். மேலும், மீனாட்சி வசமிருந்த கைப்பேசியையும் கண்காணித்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:15 AM

இதில் திருச்சி துறையூா் அருகே மலையாளப்பட்டி என்ற இடத்தில் மீனாட்சி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸாா், குழந்தையுடன் மீனாட்சியைப் பிடித்தனா். விசாரணையில் அவா் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உப்போடைப்புதூரைச் சோ்ந்த சுரேஷ் மனைவி மீனாட்சி (38) என்பதும், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த அவா் குழந்தையைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். கடத்தப்பட்ட 5 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட அரசு மருத்துவமனை போலீஸாரை மாநகர ஆணையா் ந. காமினி பாராட்டினாா்.