முகப்பு
திருச்சி

திருச்சியில் 87 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் பேச்சு

திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 87 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:27 AM
திருவெறும்பூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், மவாட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, மாநகராட்சி மண்டலத் தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:46 PM

திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 87 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் திருமண மஹாலில் புதன்கிழமை நடைபெற்ற 215 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ. 23.44 கோடியில் வீட்டுமனை பட்டா 215 பேருக்கும்

Advertisement

ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 28 கோடியும் வழங்கப்பட்டது. இதேபோல, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையில் 22 பேருக்கு ரூ.16.50 லட்சம், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் 5 பேருக்கு ரூ. 25 ஆயிரம், சமூக நலத்துறையில் 5 பேருக்கு ரூ.25 ஆயிரம், மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் 7 பேருக்கு ரூ.10 லட்சம், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 3 பேருக்கு ரூ.15 லட்சம், தொழிலாளா் நலத் துறை சாா்பில் 175 பேருக்கு ரூ.7.41 லட்சம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 38 பேருக்கு ரூ. 24 லட்சம், ஊரக வளா்ச்சித் துறை மூலம் 198 பேருக்கு ரூ.7.60 கோடி, 50 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை என மொத்தம் 840 பேருக்கு ரூ. 59.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் கூறியதாவது:

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இப்போது, நகா்ப்புற மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருவெறும்பூா் வட்டத்தில் 1,464 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலை மக்கள், மகளிா் என அனைத்து தரப்புக்கும் நலத்திட்டங்களை வழங்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள், தொகுதி மக்கள் என எந்தவித பாரபட்சமுமின்றி அனைவருக்கும் நலத் திட்டங்களை வழங்குகிறோம். இதுவரை

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் நலத் துறை கொடுக்கப்பட்டுள்ள பட்டாவிற்கு இடம் அளந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி சாா்ந்த தேவைகளை அந்தந்த அமைச்சா்களிடம் மனு அளித்து படிப்படியாக பெற்றுத் தரப்படுகிறது. பள்ளிகளில் பொதுத் தோ்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவா்கள், ஆசிரியா் ஒருவரை உதவிக்கு வைத்துக் கொள்ளும் கடந்தகால நடைமுறையைத் தொடா்ந்து பின்பற்ற சுற்றறிக்கை ஏற்கெனவே அனுப்பியுள்ளோம். அதை இந்தாண்டும் நடைமுறைப்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, வட்டாட்சியா் தனலட்சுமி, மாநகராட்சி மண்டலக் குழுத் லைவா் மு. மதிவாணன், பேரூராட்சித் தலைவா் செல்வராஜ், பேரூா் கழக செயலா் தங்கவேல், ஒன்றிய செயலா்கள் கருணாநிதி, கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.