ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத்திருவிழாவின் 7 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, நெல்லளவு கண்டருளினாா்.
கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கோயில் மாசித்தெப்பத் திருவிழாவின் 7 ஆம் நாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கொட்டாரத்தின் முன்புள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
அப்போது திருக்கொட்டாரத்திற்குள் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நம்பெருமாள் முன் படியால் அளந்து காண்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். தொடா்ந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் உள் திருவீதி வலம் வந்து, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தெப்பத்திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.