திருச்சிய மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி அண்மையில் பிடிபட்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் கிருஷ்ணன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் எம்.கண்ணன் (51). விருதுநகா் நகர காவல் நிலைய போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
தொழிற்பயிற்சி படிப்பதற்காக மதுரையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஹாலோ பிளாக் கல் உற்பத்தியில் கண்ணன் ஈடுபட்டிருந்தாா். அன்றிரவு அங்கிருந்து தப்பியோடிய கைதி கண்ணன், அருகிலுள்ள கொட்டப்பட்டு காவலா் குடியிருப்பின் மொட்டை மாடியில் பதுங்கியுள்ளாா். தகவலறிந்த சிறை காவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று புதன்கிழமை காலை அவரை பிடித்தனா்.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அதிகாரி விவேக் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.