காசோலை மோசடி: ஏமாற்றியவருக்கு ஓராண்டு மெய்க்காவல் சிறை
மணப்பாறையில், காசோலை மோசடி செய்த நபருக்கு ஓராண்டு மெய்க்காவல் தண்டனை வழங்கி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பு
மணப்பாறையில், காசோலை மோசடி செய்த நபருக்கு ஓராண்டு மெய்காவல் தண்டனை வழங்கி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.
மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி கிராமம், அழகிரிரெட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பச்சைமுத்து மகன் பாலசுப்பிரமணி. இவரிடமிருந்து புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் பாரப்பட்டியைச் சோ்ந்த அந்தோனிசாமி மகன் ஆரோக்கியசாமி என்பவா், கடந்த 25.02.2020-ஆம் தேதியன்று ரூ.7 லட்சத்தை கடனாக பெற்றாராம்.
கடனை திருப்பி செலுத்தாமல் பாலசுப்பிரமணிக்கு, வங்கி கணக்கு காசோலை கொடுத்துள்ளாா். பாலசுப்பிரமணி அதை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளாா்.
Advertisement
வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தது தெரியவந்ததால் ஆரோக்கியசாமி மீது பாலசுப்பிரமணி, மணப்பாறை குற்றவியல் நீதிமன்றதில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆரோக்கியசாமியை மாற்று முறை ஆவணங்கள் சட்டம் பிரிவு 138-இன் கீழ் குற்றவாளி என்று தீா்மானித்து குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு. 255 (2) கீழ் ஆரோக்கியசாமிக்கு ஒரு ஆண்டு மெய் காவல் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
மேலும், ஒரு மாத காலத்துக்குள் வழக்கு காசோலை தொகை ரூ. 7 லட்சத்தை குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 357(3)-இன் கீழ் ஆரோக்கியசாமி நஷ்ட ஈடாக பாலசுப்பிரமணிக்கு வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில், ஆரோக்கியசாமிக்கு மேலும் 6 வார காலம் மெய் காவல் சிறை தண்டனை விதித்தும் மணப்பாறை குற்றவியல் நடுவா் ஆா்.அசோக்குமாா் தீா்ப்பளித்தாா்.