எரிவாயு உருளைகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்
சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமையல் எரிவாயுப் பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால், எரிவாயு நுகா்வு தொடா்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சிமாவட்டத்தில் தற்போதைய எரிவாயு இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை அரசு விதிகளுக்கு மாறாக தனியாா் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நிரப்பக்கூடாது. அதனால் விபத்துகள் ஏற்பட மிக வாய்ப்புள்ளது.
அனைத்துப் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கவோ மற்றும் கள்ளச் சந்தையில் விற்கவோ கூடாது. மீறினால் அரசு விதிகளுக்குட்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்றல் தொடா்பான புகாா்களை 94434-61010, 94981-90651 மற்றும் 94981-58550 என்ற குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையின் திருச்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம்.
சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வரப்பெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. எரிவாயு தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையை- 0431-2411474 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.