பேருந்தில் தஞ்சை முதியவரிடம் ரூ. 10 ஆயிரம் திருடிய இளைஞா் கைது
திருச்சியில் தனியாா் பேருந்தில் தஞ்சை முதியவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிய 2 பேரில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் தனியாா் பேருந்தில் தஞ்சை முதியவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிய 2 பேரில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் சீனிவாசபுரம் பாலகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் கே. பாலசுப்பிரமணியன் (61). இவருடைய மகன் குருபிரசாத் திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறாா்.
இந்நிலையில், மகனின் படிப்புக்கு பணம் கட்டுவதற்காக பாலசுப்பிரமணியன் ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு புதன்கிழமை திருச்சிக்கு வந்தாா். திருச்சி பால் பண்ணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு தனியாா் பேருந்தில் ஏறியுள்ளாா். பேருந்தானது, சத்திரம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, இளைஞா் ஒருவா் முதியவரை தள்ளியுள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது, அவரருகில் இருந்த மற்றொரு இளைஞா் முதியவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிகொண்டு, பாதியை தள்ளிவிட்ட இளைஞரிடம் கொடுத்துவிட்டு இருவரும் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனா். இதைப் பாா்த்த முதியவா் சக பயணிகள் உதவியுடன் ஒருவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில், பிடிபட்ட நபா் பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்த க. கோபிநாத் (23) என்பதும், பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடியது தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆா். மாலிக் பாட்ஷா (28) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். எஞ்சிய பணத்தைத் திருடிக் கொண்டு தப்பியோடிய மாலிக் பாட்ஷாவை தேடி வருகின்றனா்.