போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை
போ்ணாம்பட்டில் பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.
போ்ணாம்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.
கோடைகாலம் தொடங்கியது முதலே தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்து, அனல் காற்று வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனா். மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. வியாழக்கிழமை மதியம் வெயில் கடுமையாக இருந்தது. மாலை நிலவரப்படி 108 டிகிரி வெப்பம் பதிவானது. இந்த நிலையில், மாலை திடீரென போ்ணாம்பட்டு நகரம், ஒன்றியப் பகுதிகளான சாத்கா், எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, பங்களாமேடு, மசிகம், ஓங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக, கடந்த சில நாள்களாக அவதிக்கு ஆளாகி வந்த மக்கள் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனா்.