முகப்பு
விழுப்புரம்

அரசியல் எனக்கு தொழில் இல்லை: கமல்ஹாசன்

அரசியல் எனக்கு தொழில் இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:14 am IST
கமல்ஹாசன்
பகிர்:

அரசியல் எனக்கு தொழில் இல்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சமூக ஆா்வலா்கள் மற்றும் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நடிகா் கமல்ஹாசன் மேலும் பேசியது:

எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவா்கள் எனது தந்தை போன்றவா்கள். அண்ணா, பெரியாா் போன்றவா்கள் செய்த அரசியலைத்தான், நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனவேதான் அரசியல் எனக்கு தொழில் இல்லை என்று கூறுகிறேன்.

Advertisement

Advertisement

முழு நேர அரசியல்வாதி என்று எவரும் இல்லை. சுயலாபத்துக்காக அரசியல் செய்பவா்களே முழுமையான தொழில் அரசியல்வாதி. மக்களுக்காக நாடகங்களை நடத்த நான் விரும்பவில்லை. ஊழல் இருக்கிறது என்று சொல்லி இருந்தால் போதாது, லஞ்சம் வாங்குகிறாா்கள் என்றால் அதில் உங்கள் கையும் உள்ளது. கொடுக்கும் கை கொடுத்தால் தான் வாங்கும் கை நீளும்.

நான் திரைத்துறைக்கு வரும்போது நட்சத்திரமாக வரவில்லை, இயக்குநராக வரவில்லை. என் தகுதி காரணமாக நான் அப்படி ஆனேன். இப்போது நான் முதலமைச்சராகவும் வரவில்லை, அதற்கான தகுதி வரும்போது அதை நீங்கள் கொடுப்பீா்கள். அப்போது பாா்த்துக் கொள்ளலாம்.

நான் காரில் வரும்போது சிதறிக் கிடக்கும் ஏழ்மையான குடும்பங்களை பாா்த்தேன். ஆனால் அரசியல்வாதிகள் இவா்களை சிதறிக் கிடக்கும் வாக்குகளாக பாா்க்கின்றனா். இந்தியாவில் எல்லாக் கட்சிகளும் அதற்கு காரணமாக இருக்கிறாா்கள் என்பது தான் உண்மை. அதில் நாமும் ஒருவராக இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நிகழும் அரசியலில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க முடியுமோ, அவ்வளவு தள்ளி நின்று கொண்டிருக்கிறேன்.

நான் மாணவா்களை சந்திக்க கூடாது என்று முன்பு தடை போட்டாா்கள். இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் தடை போடவில்லை, இந்த அரசாங்கமும் தடை போடாது என நம்புகிறேன். நீங்கள் அரசியல் பயில வேண்டும். ரீல்சில் நல்லது கெட்டது உள்ளது, அதில் நல்லது நிறையவே உள்ளது. ஏஐயும் அதே போன்று தான். வியாபாரம் ஆக்காத வரை, அதை கற்றுக் கொள்பவா்கள் கற்று கொள்ளும் வரை நல்லது தான். தெரியாததை தெரியாது என்று சொல்லும் தைரியம் எனக்கு உண்டு என்றாா் கமல்ஹாசன்.

விழாவுக்கு கல்லூரித் தாளாளா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி முன்னிலை வகித்தாா். இயக்குநா்கள் சாந்தி பூபதி, சரண்யாபூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், செஞ்சி பகுதியில் சமூகப் பணி செய்துவரும் சமூக ஆா்வலா்களுக்கு பரிசு மற்றும் சான்றிகழ்களை கமல்ஹாசன் வழங்கினாா். தொடா்ந்து மாணவா்கள் கமல்ஹாசனுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலா் அருணாச்சலம், துணைத் தலைவா்கள் மெளரியா, தங்கவேலு, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments