உமா, நமக்குள் காதல் வேண்டாம்! ரசிகையின் கடிதத்திற்கு விஜய்யின் பதில்!
முதல்வர் விஜய் தன் ரசிகைக்கு எழுதிய கடிதம் குறித்து...
தனக்கு வந்த காதல் கடிதத்திற்குத் தற்போதைய முதல்வர் விஜய் அளித்த பதில்.
அன்புள்ள காதலன் விஜய்க்கு,
உங்கள் காதலி உமா எழுதுவது...
Advertisement
Advertisement
“நீ இங்கு நலமே… நான் அங்கு நலமா?”
எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் உங்கள் படங்கள் அனைத்தையும் பார்ப்பேன். நான் படம் பார்க்கிறேனோ இல்லையோ உங்களை தினம் பார்த்துக் கொண்டே இருப்பேன். உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் ரசிப்பேன். நீங்கள், “பூவே உனக்காக” படத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பேசிய ஒவ்வொரு வசனமும் அழகாக இருந்தது.
காதல்
“இதயத்தை மட்டும் வைத்துவிட்டு மீட்க முடியாமல் தவிப்பது…” ஆம், நானும் என் இதயத்தை உங்களிடம் அடகு வைத்தேன். என்னால் என் இதயத்தை மீட்கவும் முடியாது. மீட்கவும் மாட்டேன். முன்பெல்லாம் படம் என்றாலே பிடிக்காத எனக்கு இப்பொழுது மிகவும் பிடித்துவிட்டது. அது உங்களால்தான்.
காதலி
“நேரடியாக இதயத்தைத் தாக்கும் மின்னல்”
காதலி மட்டும் இதயத்தை தாக்கும் மின்னல் அல்ல… காதலனும்தான்… என்று நிரூபித்துவிட்டார் என் விஜய். விஜய் என்ற பெயரை எங்காவது கேட்டாலே என் ரத்தமும் இதயமும் துடிக்கிறது. என் இதயம் துடிக்கும் சப்தம் உங்கள் காதில் கேட்கவில்லையா?
காதல்
“விழிகள் மோதிய
விபத்தின் காயம்…”
ஆனால், விழிகள் மோதாமலேயே என் இதயத்தில் காயம். கடிதம் பாதி சந்திப்பிற்கு சமம். இந்தக் கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது நாம் இருவரும் மறைமுகமாக சந்தித்துக் கொள்வோம்.
“தனிமையும் சுகமே…
பிரியமானவரே…
உங்கள் நினைவே அதற்கு காரணம்…”
ஆம். எனக்கு தனிமை, சோகம் அனைத்திற்கும் விடை தருவது உங்கள் நினைவுகள்தான். எந்த புத்தகத்தில் உங்கள் புகைப்படங்கள் வந்தாலும் அதனைக் கிழித்து வைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்கு மிகவும் உயர்ந்தவர். உலகில் உங்களைவிட சிறந்தவர் வேறு யாருமில்லை. எனக்கு உங்களை புகழ வேறு வார்த்தையே தெரியவில்லை.
“சூரியனைக் கண்டவுடன் புன்னகைத்து நிற்கும் தாமரைப் போல…” உங்களின் புகைப்படம் கண்டு என் இதயம் புன்னகைக்கிறது.
“பிளைங் கிஸ்
ஸ்டாம்ப் இல்லாமல்
காதலனை
போய் சேரும் கடிதம்”
நான் அனுப்பும் பிளைங் கிஸ் உங்களிடம் சேருகிறதோ சேரவில்லையோ… ஆனால், எழுத்து வடிவில் வந்துள்ள என் இதயம் உங்களிடம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். நான் யாருக்குமே இவ்வளவு உணர்ச்சிவசமாக எழுதியதில்லை. இது நான் எழுதும் இரண்டாவது கடிதம். நீங்கள் அனுப்பிய போட்டோ எனக்கு கிடைத்தது. ஆனால் அனைவருக்கும் அனுப்பும் Printed Photo (அச்சிட்ட புகைப்படம்) எனக்கு வேண்டாம். உண்மையான புகைப்படமும் உங்கள் ஆட்டோகிராஃபையும் அனுப்பவும். என் உயிரே… இந்த கடிதம் மூலம் என் இதயம் மற்றும் உயிரை அனுப்பியுள்ளேன். உண்மையான புகைப்படத்தை அனுப்பவில்லை என்றால் லூஸ் ஆகிவிடுவேன். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கடிதம் எழுத ஆசைப்படுகிறேன்.
இரவு முழுவதும் எழுதிய கடிதம் இது. இன்னும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் போல உள்ளது. உங்கள் அனுமதியின்றி என் காதல் கடிதம் தொடரும். இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன்.
“உன் கன்னத்தைக் காகிதமாக்கி
என் இதழ்கள் எழுத துடிக்கிறது”
இப்படிக்கு,
உமா, திருச்சி.
-------------
என் உயிரிலும் மேலான உமாவிற்கு,
உங்கள் விஜய் எழுதுகிறேன்…
“ஒரு கடிதம் வந்தது – அதில்
ஒரு உயிர் இருந்தது.”
அதில் வந்த எழுத்துக்களைப் படித்தேன். அதில் ஒரு இதயம் இருந்தது. காற்று வந்தது. அதில், ஒரு பிளைங் கிஸ் இருந்தது; அது உங்களுக்கு சொந்தமானது என்று உங்கள் பெயர் சொன்னது.
என்னை ரசித்து நேசித்து நீங்கள் எழுதிய கடிதத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஒரு புதிய புத்துணர்ச்சியை உங்கள் கடிதத்தின் மூலம் எனக்கு வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது உங்கள் உள்ளத்தில் பூத்த அந்த புதிய நேசம் காதலாக இல்லாமல் நட்பாக பூக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். உங்கள், "ஹைகூ கவிதைகள் என் உள்ளத்தில் மலர்களைப் பரவியது. ஒரு கலைஞனுக்கு ஆயிரம் சொத்துக்கள் இருக்கலாம். ஆனால், ரசிகர்களின் பாராட்டுகள்தான் அவனுக்கு பெரிய சொத்து. அது உங்களைப் போன்ற ரசிக ரசிகைகளின் மூலம் எனக்கு கிடைப்பதால் நான் எல்லையற்ற ஆனந்தம் அடைகிறேன்.
என்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாக எழுதியிருந்தீர்கள். காதல் என்பது ஒரு பக்கம் அழகாக இருக்கும். மற்றொரு பக்கம் வேதனையாக இருக்கும். ஆனால், நட்பு அப்படியில்லை நட்போட இரண்டு பக்கமும் அழகாகவே இருக்கும். நம் கடிதங்கள் நட்பிற்காக கைகோர்க்கட்டும்"
அன்புடன்,
விஜய்.
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் 1.1. 1997-ல் வெளியான கடிதம்.