அருங்காட்சியக துறை பேருந்து மூலம் பள்ளிகளில் நடத்தப்பட்ட கண்காட்சி மாணவ, மாணவிகளை கவர்ந்தது.
தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறையானது, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் அருங்காட்சிய பொருள்களை காட்சிப்படுத்தி வருகிறது. இதற்காக பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட உயர்ரக பேருந்து 2015-ஆம் ஆண்டு முதல் மாவட்டம் வாரியாக சென்று வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை கடலூருக்கு வந்திருந்த பேருந்தை, கடலூர் காப்பாட்சியர் செ.ஜெயரத்னா வரவேற்றார். இந்தப் பேருந்து கடலூரில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு அருங்காட்சியக பொருள்களை காட்சிப்படுத்தியது.
பேருந்தின் உள்ளே 16 தனித் தனி அரங்குகளும், வெளியே 16 அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில், வரலாறு, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, தோற்றங்கள், பேரரசுகள் உருவான காலம், இயற்கைக் காட்சிகள், பண்டைய கால மனிதனின் ஆடை, நாணயங்கள், பாத்திரங்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
இந்தப் பொருள்களுக்கான விளக்கங்கள் தமிழ், ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்தக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது. பின்னர், திருவாரூர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.