கடலூர் பேருந்து நிலையத்தில் பொருள்கள் விற்பனையில் விதிமீறல்: ஆட்சியர் ஆய்வுக்குப் பிறகும் அதே நிலை
கடலூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சுகாதாரமற்ற பொருள்கள் விற்பனையை சுட்டிக்காட்டிய பிறகும், ஞாயிற்றுக்கிழமையும் அதே நிலை தொடர்ந்தது
கடலூர் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சுகாதாரமற்ற பொருள்கள் விற்பனையை சுட்டிக்காட்டிய பிறகும், ஞாயிற்றுக்கிழமையும் அதே நிலை தொடர்ந்தது சார்-ஆட்சியரின் ஆய்வில் தெரியவந்தது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் சனிக்கிழமை கடலூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல்வேறு கடைகளில் உணவுப் பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டதும், தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாமல் விற்பனை செய்வதையும் கண்டுபிடித்தார். இதையடுத்து, கடை உரிமையாளர்களுக்கு உரிய அறிவுரை கூறியதோடு, உணவு பாதுகாப்புத் துறை மூலமாக 15 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்ய வைத்திருந்த தின்பண்டங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கடலூர் பேருந்து நிலையத்தில் சார்-ஆட்சியர் கே.எம்.சரயு ஞாயிற்றுக்கிழமை காலை தூய்மைப் பணி மேற்கொண்டார். ஆட்சியர், சனிக்கிழமை ஆய்வு செய்தபோது இவரும் உடனிருந்ததால் கடைகளுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது, சனிக்கிழமை என்ன நிலையில் கடைகளில் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதோ, அதே நிலைதான் ஞாயிற்றுக்கிழமையும் இருந்தது தெரியவந்தது. ஈக்கள் மொய்த்தபடி இருந்த கேக், உற்பத்தி, காலாவதி தேதியில்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த பொருள்களை பறிமுதல் செய்தார்.
தொடர்ந்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரை தொடர்புகொண்டு, கடலூர் பேருந்து நிலையத்தில் சுகாதாரமான முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.