பண்ருட்டி ஒன்றியம், தோப்புக்கொல்லை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
வட்டார கல்வி வளமைய ஆசிரியப் பயிற்றுநர் இளஞ்செழியன் விழாவுக்கு தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். புலவர் ராமலிங்கம் சிறந்த மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் அணிவித்தார். ரைசிங் யூத்ஸ் பவுண்டேஷன் இந்தியா நிறுவனத் தலைவர் பி.கே.ரேவந்த் ஆண்டனி சிறப்புரையாற்றி பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
சமூக ஆர்வலர் ஜெயசெழியன், நெய்வேலி ரெஸ்ட் தொண்டு மைய நிறுவனர் பவுல்ராஜ் , சட்டநாதன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக தலைமை ஆசிரியர் காமாட்சி வரவேற்றுப் பேசினார். வி.ஆர்.எஸ் பொறியியல் கல்லூரி ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ராஜ் விழா தொகுப்புரை நிகழ்த்தினார். விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் மார்ட்டின் புனிதா நன்றி கூறினார்.