கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் 4 இடங்களில் நடைபெறும் என மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி (படம்) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 102-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி வருகிற 18-ஆம் தேதி சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி சார்பில் சிதம்பரத்திலும், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி சார்பில் திட்டக்குடியிலும், 19-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதி சார்பில் காட்டுமன்னார்கோவிலிலும், 20-ஆம் தேதி புவனகிரி சட்டப் பேரவை தொகுதி சார்பில் சேத்தியாதோப்பிலும் பொதுக்கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும்.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.